Tuesday 23 August 2011

குரு நானக் காட்டிய வழி

குரு நானக் காட்டிய வழி
 
குரு நானக்
தமது சுற்றுபிரயாணத்தில் எம்னா-பாத் என்ற கிராமத்தை அடைந்தார். அவரோடு பாயி-மர்தானா வும் உடன் இருந்தார். அந்த ஊரில் பாயி-லாலோ என்ற தச்சன் வசித்து வந்தார். அவருக்கு பச்சிலைகளை வைத்து செய்யும் மருத்துவமும் ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அவரது எளிமையும் நேர்மையும் பக்தியும் கண்டு அவரோடு சில காலம் தங்கினார் குரு நானக். அவர் நானக் கை விட பதினேழு வருடங்கள் பெரியவர். சீக்கிய மதத்திற்கு அடிக்கல் இவருடைய வீட்டில்தான் நாட்டப்பட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பாகிஸ்தானத்தில் இருக்கும் அவர் வீடு சீக்கியர்களுக்கு ஒரு புனித யாத்திரை தலமும் ஆகும்.

அதே ஊரில் 'மல்லிக் பாகோ' என்ற நிலசுவான்தாரும் வசித்து வந்தார்.அவர் பதானி நவாப்பின் அரசில் ஒரு முக்கிய அதிகாரியும் கூட. உயர்குடியை சேர்ந்தவர். ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் ஒரு பெரும் விருந்து வைத்தார்.குருநானக்கிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. நானக்~கைப் பற்றி பலவிதமாகக் கேள்விப்பட்டிருந்த பாகோ விற்கு இது அதிசயமாகப் பட்டது. பாகோ நானக் கை தேடி வந்து கேட்கலானார்.

“ஐயனே உயர்குலத்தில் பிறந்து, பலருக்கும் ஆன்மீக குருவான நீங்கள் கீழ்குலத்தில் பிறந்த லாலோ வுடன் ஏன் இருக்க வேண்டும் ?”

“அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை.எனக்கு யாவரும் ஒன்றே. நான் எளிய உணவையே விரும்புபவன். அதனால் பாயி லாலோவுடன் தங்கினேன்”

லாலோ படைத்த உணவை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் என் வீட்டு விருந்தை புறக்கணிக்கும் காரணத்தை அறியலாமா?”

“அவசியம் தெரிய வேண்டுமா ?”

“ஆம்”

“உங்களுக்கு அவ்வளவு விருப்பமென்றால் சிறிது வரவழையுங்கள்” என்று மல்லிக் பாகோவிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த உயர்ந்த விருந்து வந்து சேரும் முன்னரே லாலோவின் வீட்டிலிருந்தும் சிறிது உணவை கொண்டு வரச் செய்தார்.
இரண்டும் வந்தததும் ஒரு கையில் லாலோவின் வீட்டு உணவையும் மற்றொன்றில் பாகோ வீட்டு உணவையும் எடுத்துக்கொண்டு பிழியும் வகையில் கைகளைப் பிசைந்தார். சுற்றியிருந்த அனவரும் ஆச்சரியப்படும் படியாக லாலோ படைத்த உணவில் பால் துளிகளும் பாகோ படைத்த உணவில் இரத்தமும் சொட்டத் தொடங்கின.

மல்லிக் பாகோ விற்கு முகம் வாட்டமடைந்தது.
“குருவே ஏனிந்த கண்கட்டு வித்தை. என்னை இப்படி அவமானத்திற்கு ஆளாகும்படி செய்ய என்ன தவறு செய்தேன்?”


“அன்பிற்குரிய பாகோ உன்னை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. நீ உண்மையை அறிய விரும்பியதால் உனக்கு அதைக்காட்ட முனைந்தேன். லாலோ கடும் உழைப்பாளி. தனக்கு நேர்மையாக வரும் கூலி மூலம் குடும்பம் நடத்தி வருகிறான். அதனால் அவன் தந்த உணவிலிருந்து பால் வெளிப்பட்டது. ஆனால் உன் விஷயத்திலோ உன் செல்வம் நேர்வழியில் வந்ததல்ல. உன் நிலங்களில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நீ தகுந்த முறையில் கூலியும் கொடுப்பது கிடையாது. அவர்களின் ரத்தத்தில் தோன்றியது உன் வசதிகளும் ஆடம்பரங்களும். ஆகவே தான் உன் வீட்டு உணவில் இரத்தம் வெளிப்படுகிறது” என்று விளக்கினார். பேச்சற்று நின்றார் மல்லிக் பாகோ.

No comments:

Post a Comment